NFPE

Thursday 21 November 2013

சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!





மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:

சிறப்பு வசதி!
''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.


யாருக்கு?
அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கமிஷன்!
சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும். 

ஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும். 

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.

அங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!
Courtesy : http://www.sstaweb.com

No comments:

Post a Comment